Monday, November 7, 2011

சிறு காதல் மடல்..


(தம்பியின் காதல் பிரிவுக்கு பின், தம்பியின் கதலுக்காக அண்ணண் உதவிய சிறு காதல் மடல்..)

பாலை வறண்டாலும்,
 
பகல் சுட்டாலும்..
பாலையும் உயிர்த்தெழும்,
இரவினில் உயிர்பெறும்..
மாதங்கள் மாண்டாலும்,
மனங்கள் மாறாது..
மறப்பது மட்பாகுமோ?
மன்னிப்பு ஈடாகுமோ??...

(இன்னும் பதில் வரலையாம்!! 
எப்படி வரும்..சொந்தமா எழுதுனாவே வராது..
எஸ்கேப்........)

Wednesday, August 31, 2011

கதம்பம் -ஜன் லோக்பால்,மங்காத்தா,Airtel,Android

ஜன் லோக்பால் :
என்னுடைய ட்வீட் மற்றும் பஸ்களை பார்த்து என்னை ஹசாரேவுக்கு எதிரானவன் என்று முடிவெடுத்து விட்டர்கள்..உண்மையில் நான் ஹாசாரேவை ஆதரிக்கிறேன். ஆனால்  ஜன் லோக்பால் பற்றி சொல்லப்படும்  மிகைப்படுத்தப்பட்ட  (அ) தவறான கருத்துக்களை எதிர்க்கிறேன்.உதாரணம்,,இந்தியாவில் வரி இருக்காது,பெட்ரோல் விலை பாதியாக குறையும்,, ஒரே நாளில் சங்கர் படம் மாதிரி ,மொத்த இந்தியாவே  மாறிடும் என்பது போன்ற கருத்துக்களை தான் எதிர்க்கிறேன்.
சந்தோஷ் ஹெக்டே அவர்களின் உண்மையான வரிகளை நினைவு கூறுகிறேன்,"ஊழலை ஒழிப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது,உடனடியான அற்புதத்தை எதிர்பார்க்க முடியாது "

மங்காத்தா: 
பில்லாவிற்கு பிறகு நான் பார்த்த அஜித் படம் .என் எதிர்பார்ப்புகள் வேறு.ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கும் என்று நினைக்கிறேன் .ஒரு முறை பார்க்கலாம்.
நான் ரசித்த வரி ,அஜீத் - மே வந்தா எனக்கு வயசு நாப்பது.

ஒரு படத்தில் வில்லனாகவே நடிக்கும் திறமையும்,தன் வயதை சொல்லும் திறமையும் அஜீத்க்கு உண்டு என்பதை நிரூபிக்கும் திரைப்படம்.

Airtel :
airtel 3G
உபயோகிக்க ஆரம்பித்து விட்டேன்.அற்புதமான வேகம்.,இத்தனை நாள் உபயோகிக்காமல் விட்டேனே  என்று வருத்தப்படுகிறேன்.நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாம், தப்பு இல்லை.

Airtel broadband - புதிய பிளான்கள் என்று அநியாய விலை போட்டு இருக்கிறார்கள்..குறைந்த சந்தாவே 699 ரூபாய் தான்.இது ரொம்ப ஓவர் தானே?

Android :
android ன் சிறந்த பத்து apps என்று நிறைய பதிவுகள் வருகின்றன.ஆனால் யாரும் உபயோகப்படுத்தி  போட்டது மாதிரியே தெரியவில்லை.ஏதோ,ஆங்கில பதிவின் அப்பட்டமான copy  ஆகவே தெரிகிறது.

எனக்கு பிடித்த apps
1.Twitter 
2.Go SMS
3.Market on mobile by moneycontrol
4.Google plus
5.Facebook
6.Newshunt (for reading tamil news papers dinamani,dinamalar and one india-thats tamil and english news papers and many other language news papers)
7.Espn cricinfo (cricket updates)
8.Indian rail info (pnr status,train status,coach status)
9.Ngpay (shopping maal on mobile,cinema ticket booking,train ticket booking,many..)
10.Opera mini (Android not supporting tamil font now,so use opera with image option to read tamil fonts).

Wednesday, June 15, 2011

பேச்சுரிமை

நான் அப்படி
நடந்திருக்ககூடாது..
நண்பனை திருப்திபடுத்தியிருக்க வேண்டும்..
என்னுடைய அவமானங்களை
அன்று ஏற்றிருக்கலாம்..
எனக்கு எவ்வளவோ உதவியிருக்கிறான்,
அதை மதித்திருக்கலாம்..
இப்படி குழப்பங்கள் கூட கூட,
என் குரல்வளை இறுக்கமாகிறது..
உறவுகள் குரலை இறுக்குமாயின்..
என் குரல்வளை போதும்..
நான் நானாகவே இருக்கவிளைகிறேன்..

Wednesday, May 4, 2011

மென்பொருள் நிறுவன வளாக தேர்வு - வழிகளும்,வலிகளும் - 1

2007

எப்படியோ இந்த M 3 (maths - 3 ) பேப்பரை பாஸ் பண்ணிட்டேன்..maths - 3 இல் "arrear" (பெயில் ) இல்லாமல் பாஸ் பண்ண,போன ஜென்மத்தில் புண்ணியம் பண்ணி இருக்க வேண்டும் அல்லது ஒழுங்காய் படித்து இருக்கு வேண்டும் .இனிமேல்  நானும் வளாக தேர்வுக்கு போலாம்.முக்கியமாய் வகுப்புக்கு கட் அடிக்கலாம்.
 
இப்ப எல்லாம் டீ கடைல டீ போடுறதுக்கு கூட இன்ஜீனியர் படிப்பை ஒரு பொருட்டா மதிக்கறதே இல்லை. கல்வி தரத்தை உயர்த்துவதற்கு பதிலா,பாஸ் ஆனவங்க எல்லாம் இன்ஜீனியர் படிக்கலாம்னு மாத்தியதின் விளைவு,கணக்கில் அடங்கா  இன்ஜீனியர்கள். நானே ஒரு இன்ஜீனியர்.இதில் இருந்தே,இக்கால இன்ஜீனியர்களின் தரத்தை நீங்கள் உணரலாம். இந்த கணக்கில் அடங்கா அனைவரையும் "personal interview"  வைப்பது என்பது இயலாத காரியம்.அதனால் தரம் குறைந்த  இன்ஜீனியர்களை  களை எடுக்கும் வழிகள் தான் பல கட்டங்கள் ,மாணவர்களை பொறுத்தவரை பல கண்டங்கள்.

இதோ வந்துருச்சு முதல் வளாக தேர்வு
"Placement coordinator " (இவர் தான் இந்த தேர்வுகளை எல்லாம் ஏற்பாடு  பண்றவர்,கண்காணிக்கறவர்) அறிவிக்கறார் ,இந்த வளாக தேர்வில் கலந்து கொள்ள தகுதிகள்,
1 ."no standing arrears "( தற்பொழுது எல்லா பாடத்திலும் பாஸ் பண்ணி இருக்கணும்,எத்தனை முறை எழுதினோம் என்பது கணக்கில் வராது..இன்னொன்னு இருக்கு "no history of arrears ",வரலாறில் பெயிலே ஆகி இருக்க கூடாது...சீ சீ இந்த பழம் புளிக்கும் )
2 . பத்தாவது மற்றும் பனிரெண்டாவதில்  60 % மேல் மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும்..(பத்தாவதுல ஊர சுத்திட்டு 290 (58 %) மார்க் வாங்கிருந்தா காலி தான்.நல்ல வேலை நான் அப்படி பண்ணுல..பனிரெண்டாவதில பண்ணுனேன்,ஆனா 75 %  தண்டி தப்புச்சிடேன்)




முதல் வெற்றி,நான் இந்த தேர்விற்கு செல்ல தகுதி பெற்று விட்டேன்..ஹையா ஜாலி..ஆனா இதுக்கு இது எல்லாம் வேணுமாம்.."formal shirt -பண்ட" (காலர் வச்சது,பூ-பொம்மை  போடாதது,முழு கை),"shoe ,shocks".(நம்ம பசங்க பல பேரு "shoe " மட்டும் தான் போடுவாங்க),,பெல்ட்(பக்கில்சுல பந்தா இல்லாமல்,கோடு போடாமல்),,டை(அதை கட்டுவது தான் கொடுமை),,எல்லாத்தையும் விட கொடுமை "resume (எ) curriculum  vitae ",(உங்களின் படிப்பு ஜாதகம்),அப்புறம் சிரிச்ச மாதிரி நாலு போட்டோ..
சரி விடு,,அடுத்த "interview " ல பாத்துக்கலாம் னு இத "deal " ல விட முடிவு பண்ணினோம்(நல்லதுக்கும்,கேட்டதுக்கும் நாலு  பேரு இருப்பாங்க இல்ல?).

இது ஒரு வெளி வளாக தேர்வு(அதாவது வேற ஒரு  காலேஜ் ல  நடக்கும்,நாம போய் கலந்துக்கணும்)..இது தான் மகிழ்ச்சியான செய்தியே..உள் வளாக தேர்வுனா,நம்மளை கட் அடிக்க விட மாட்டாங்க..ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை "attendance"  போட சொல்லுவாங்க.

வெற்றிகரமாய் முதல் கட்டம்,aptitude test ,,நாலு விடை இருக்கும் ,,நமக்கு பிடிச்சதை எடுத்துக்கலாம்..ஆனா இதிலும் சில ஏழரை இருக்கு.தப்பான பதிலுக்கு மார்க்கை குறைக்கிறது(negative marks )  ..அப்படினா எனக்கு  முட்டை மார்க்குக்கு  கம்மியா தான் வருமே?,,எப்படியோ முட்டை கிடையாது.



முதல் பக்கத்தில்  நிரப்ப சொல்லி பல கட்டங்கள்  இருந்துச்சு.எல்லாத்தையும் நிரப்பிட்டு பார்த்தா,புகைப்படம் ஒட்ட சொல்லி இருந்துச்சு..நாலு போட்டோ நாப்பது ரூபாய்க்கு எடுத்து,இதுக்கு எதுக்கு வேஸ்ட் பண்ணிட்டுனு ஒட்டவே இல்லை.படிப்பு ஜாதகம்(cv) வேற இல்லை ..கடைசியாய் புகைப்படம் ஓட்டாதவர்கள் விடைகள் திருத்தப்படாது என்றார் தேர்வு கண்காணிப்பாளர்.. அது ஒழுங்கா எழுதுனவனுக்கு,எனக்கு இல்ல.

வெளியில் வந்ததுக்கு அப்புறம் தான் தெரிஞ்சுது,போட்டோவ கலர் செராக்ஸ் எடுத்து கட் செய்து  தர கடை இருக்குதாம்.நாப்பது ரூபாய்க்கு - இருவது போட்டோ வருமாம்.ச்சே,இது தெரிஞ்சு இருந்த நம்ம அதிர்ஷ்டம் என்னனு பார்த்து இருக்கலாம்..ஒரு நல்ல விஷயம் என்னன்னா,முதல் கட்டத்தில் தேர்வு பெற்றவர்கள் பெயர்கள் மட்டும் தான் சொல்லுவார்கள்.யாருடைய மதிப்பெண்ணும் சொல்ல மாட்டார்கள்.தப்பிச்சேன்டா சாமி..வெளி ஊர்ல எனக்கு ஏற்பட வேண்டிய ஒரு பெருத்த அவமானம் தவிர்க்கப்பட்டது. எப்படியோ இந்த முறை படிப்பு ஜாதகம்(cv)ரெடி பண்ணிட்டேன்..தப்பு,தப்பு "copy " பண்ணிட்டேன்..அடுத்த தேர்வுல ஒரு கை பார்த்துடலாம்..


தொடரும்..


Wednesday, March 23, 2011

ஒரு அரசியல்வாதி உருவான கதை - 2

முன்கதை:
ஒரு அரசியல்வாதி உருவான கதை - 1.

வோட்டு எண்ணிக்கை பரபரப்பாக நடந்து மதியம் 1 மணிக்கு முடிந்தே விட்டது.அண்ணனுக்கோ அதிர்ச்சி.அதே "இரண்டு" வோட்டுகள்.
அண்ணன் மலை போல நம்பிய "கிறுக்கு ராமசாமி",அண்ணனை ஏமாத்திட்டான்.யார் இந்த "கிறுக்கு ராமசாமி"? இவனிடம் தான் அண்ணன் 20 ருபாய் குடுத்து தனக்கு வோட்டு போட சொல்லி இருந்தார்.இவனை நம்பி தான் வோட்டு என்றதுக்கே அண்ணன் வந்தார்.

வோட்டு எண்ணிக்கை முடிஞ்சிருச்சு,ஏஜன்டு எல்லாம் கையெழுத்து போடுங்க என்றார் தேர்தல் அதிகாரி.
"செல்லா வோட்டுகளை மறுபடியும் சரி பாக்கணும்" என்றார் அண்ணன்.
"சார்,லீடிங் 350  மேல போய்டிச்சு ,இனி "வில் அம்பு"சின்னம்  தேறாது .செல்லா வோட்டே 67 தான்,நீங்க எந்த சின்னம்?" என்றார் அதிகாரி.
"நான் வாளி சின்னம்"
"வாளியா?,, கவுண்டிங் பார்த்த ஆபிசர்,மயக்கம் போடா குறையா,சார் மொத்த வோட்டே ரெண்டு தான் விழுந்திருக்கு,இதுக்கு ரீ கவுண்டிங் ஆ?"
"ஆமா சார் ,இது என் மான பிரச்சனை,மறுபடியும் பாருங்க"னார் அண்ணன்.
இந்த ஆளிடம் பேசி புரியோஜனம் இல்லை,இந்த 67 யை மறுபடி கூட்டி தொலைப்போம் என்று எண்ணி ,மறுபடியும் செல்லா வோட்டை சரி பார்த்தார் தேர்தல் அதிகாரி.
அண்ணனுக்கு லட்டு மாதிரி கிடைச்சது ஒரு வோட்டு சீட்டு,
"சார் இத பாருங்க ,எனக்கு விழுந்த வோட்டு".
அது அண்ணனுக்கு விழுந்த  வோட்டு என்று எல்லாம் சொல்ல முடியாது.பாதி மேலயும்,கீழயும் இருந்தது.உண்மையை சொல்லனும்னா,அது "செல்லா வோட்டு"
வெற்றி பெற்ற வேட்பாளரின் ஏஜன்டுகள்,சார்,சீக்கிரம் ரிசல்ட் காப்பி கொடுங்க என்று நச்சரிக்க,வேறு வழி இல்லாமல் வாளி சின்னத்தின் வோட்டு "மூன்று" ஆனது.

அண்ணன் தன் சபதத்தில் வெற்றி பெற்று விட்டார்.இந்த முடிவில் வருத்தம் அடைந்த ஒரே ஜீவன் "சின்ன பிள்ளை" தான்.


2006 .
அண்ணன் இந்த முறை எடுத்த முடிவு விபரீதமானது.சட்ட மன்ற தேர்தலில் போட்டி. இந்த முறை அண்ணன் சின்ன பிள்ளையிடம் சொல்லவே இல்லை.நேராக வேட்புமனு தாக்கல் செய்ய போனார். வேட்பு மனு தாக்கல் விதிகள் கடுமையாக்கப்பட்டு விட்டதால் விழி பிதுங்கி வாசலில் நின்றார்.

இந்த முறை நாம ஏமாற கூடாது,எப்படியும் ஒரு நாலு பேரு நம்ம ஆளுங்கள நிறுத்தி ,ஒரு நாலு பூத் ஏஜென்ட் செட் பண்ணுனா தான் கள்ள வோட்டை தடுக்க முடியும் என்று ஆலோசனையில் இருந்த எதிர்கட்சியின் பார்வையில் மாட்டினார் நம்ம அண்ணன்.
"ஆளு பாக்க ஒகே வா தான் இருக்கான் ,ஆனா ஓட்டை பிரிச்சுட போறான்யா? "சொன்னார் வேட்பாளர்.
"பிரச்சனையே இல்ல,நம்ம ஆளு தான்.எல்லாம் விசாரிசாச்சு,,ரெண்டு வோட்டுக்கு மேல ஒரு வோட்டு கூட வாங்க மாட்டார் " என்று ஒருவர் சொல்லி,அனைவரும் சிரிக்க,அண்ணனின் வேட்பு மனு ஒரு பைசா செலவு இல்லாமல் தாக்கல் ஆனது.

அண்ணனின் சின்னம் "மட்டை பந்து வீரர்",இவர்க்கு என்று தனியாக பூத் கமிட்டி எல்லாம் போடப்பட்டது.ஆனால்,இங்கு எதிர் கட்சிக்கு வாக்கு திரட்டும் பணிகள் துடிப்பாய்  நடந்தன.

இதை பார்த்த சின்னபிள்ளைக்கு ஆத்திரம் பொத்து கொண்டு வந்தது.சரி,இந்த கருமம் எல்லாம் எலெக்ஷன் முடிஞ்சா நின்னுரும் என்று பல்லை கடிச்சிக்கிட்டு, பொறுத்து கொண்டு இருந்தாள்.
 
தேர்தல் நாள் வந்தது:
இந்த முறை சின்ன பிள்ளையிடம் அண்ணன் வோட்டு கேட்கவில்லை.அவளும் போடவில்லை . தன்னையும் ஒரு மனுசனாக மதிச்சு, செலவு செஞ்சு, தேர்தலில் நிக்க வச்ச எதிர் கட்சி வேட்பாளருக்கே அண்ணன் வோட்டு போட்டார்.
அப்படியானால்,இந்த முறை அண்ணனின் வோட்டு "முட்டை" யா?

வோட்டு எண்ணும் நாளும் வந்தது:
அண்ணன் ஆதரவு பெற்ற எதிர்க்கட்சி வேட்பாளர்,6000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.அண்ணனுக்கு கிடைச்ச வோட்டு எத்தனை?
மறுதினம் செய்தித்தாள் வெளியிட்ட நாமக்கல் மாவட்ட செய்தி சுருக்கம் இது தான்
"..... சட்டமன்ற தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் ..... 6000 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்..சுயேட்சையாக போட்டியிட்ட பாண்டியன் என்பவர் 10,012 வாக்குகள் பெற்றது ..... வேட்பாளரின் தோல்விக்கு காரணமாய் அமைந்தது".

2011 :

ஒரு முன்னணி நாளிதழ் தேர்தல் கருத்து கணிப்பு:

"......திரு பாண்டியன் ....... கட்சியில் இணைந்து உள்ளார் .இவர்,சென்ற சட்டமன்ற தேர்தலில் "10,012" வாக்குகள்  பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது..இதை அடுத்து இந்த தொகுதியில் ....கட்சியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாய் உள்ளது.."


பெரியோர்களே,தாய்மார்களே ,வாக்காள பெருங்குடி மக்களே,
அண்ணன் "பாலிடிக்ஸ் பாண்டியன் " உங்களிடையே வாக்கு சேகரிக்க வந்து கொண்டு உள்ளார்..உங்களின் பொன்னான வோட்டு "................" சின்னத்துக்கே.

இவர் எப்படி 2006 தேர்தலில் 10,012 வாக்கு வாங்குனார்னு தெரியுமா?

2006 : தேர்தல் நாள்.

"தம்பி நான் எழுத படிக்க தெரியாதவன் தான்.ஆனா வோட்டு , கரெக்டா போட்ருவேன்..ஒண்ணாவது பட்டன் அவ்வளவு தானே?,,போட்டுடறேன்"என்று சென்ற பெரியவர் அழுத்திய பட்டன் "எண் - 16 - அண்ணன் பாண்டியனின் சின்னம்".




படிக்காதவங்களுக்கு எண் ஒன்று மேல இருந்து வராது..கீழே இருந்து தான் வரும்..  முதலில் அவங்க கைக்கு எந்த பட்டன் வருதோ அது தான் நம்பர் "ஒன்று"


பெரியோர்களே,தாய்மார்களே பிடிச்சு இருந்தா எனக்காவது "இன்ட்லி  " வோட்டு போடுங்க.

Tuesday, March 22, 2011

ஒரு அரசியல்வாதி உருவான கதை - 1.


நாமக்கல் மாவட்டம்,கரிச்சிபாளையத்தில பாண்டியன்னு சொன்னா ஒருத்தருக்கும் தெரியாது."பாலிடிக்ஸ் பாண்டியன்னு" சொன்னாதான் எல்லாருக்கும் தெரியும்.
அப்படி, இவர் என்ன அரசியலில் சாதிச்சிடாருன்னு கேட்கறவங்களுக்கு தான் இந்த "வரலாறு".

வாழ்க்கையில ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு கனவு இருக்கும்.அந்த மாதிரி, நம்ம அண்ணன் பாண்டியனுடைய கனவு, ஒரு தேர்தலில் வெற்றி பெறனும் அவ்வளவு தான்.அதுக்காக,இவரும்  நாலு முறை வார்டு மெம்பர்க்கு நின்னுருக்காரு.எல்லாம் தடவையும்,இவருக்கு கிடைச்ச வோட்டு என்னமோ ரெண்டு தான்.மொத முறை, இவரு  அம்மாவும் ,அப்புறம் மூணு முறை இவரு பொண்டாட்டி சின்னபிள்ளையும் போட்ட வோட்டு தான்,இந்த ரெண்டாவது வோட்டு.


அண்ணனின் அரசியல் வாழ்வின் ஆரம்பமே "பாட சாலை" தான்.
"எங்க பாண்டியனுக்கு வோட்டு போடறவங்க எல்லாம் கை தூக்குங்க" என்றார் டீச்சர்,,பச்,,
பத்தாம் வகுப்புல,லீடர் போஸ்டுக்கு நிக்க சொல்லி சண்முகதினால் தூண்டி விடப்பட்டு,முட்டை வோட்டுல அவமான பட்டு அரசியல் வாழ்வை துவக்கியவரு தான் அண்ணன்.

2001.

"இந்த தடவ நான் வார்டு மெம்பர்ல நிக்குல புள்ள" என்றான் பாண்டியன்.
"அப்பா,நல்ல குமாரசாமி, நான் உன்ன கும்புட்டது வீண் போகல சாமி,இந்த ஆளுக்கு இப்பவாச்சும் புத்தி வந்துச்சே" என்றாள் சின்னபிள்ளை.
"அது இல்ல புள்ள,இத்தன நாளா நானும் மெம்பர்ல நின்னுட்டேன்.அதான் ,இந்த தடவை பஞ்சாயத்து எலெக்ஷன்ல நிக்கலாம்னு இருக்கேன்  "
"அட பாவி மனுசா,இது வரைக்கும் உள்ளூர்ல நம்ப மானம் கப்பலேத்துனது பத்தாதுனு, அய்யா துரை  ,இப்ப கிராமம் முழுக்க மானம் கெட்டு நிக்க போறியா?,ஏன் இப்படி தல புழுப்புல ஆடுற?.ஐயோ இந்த கொடுமைய நான் எங்கன போய் சொல்லுவேன்.இதா,இங்க பாரு,இந்த முறை மட்டும் எலெக்ஷன்ல ரெண்டு வோட்டுக்கு மேல வாங்கு,நான் இனிமே வாய மூடிகிட்டு இருக்கேன்.இல்ல, இந்த பொழப்ப இதோட விட்டுரு,ஆமா சொல்லிபுட்டேன்." என்று புலம்பினாள் சின்னபிள்ளை.
அம்மா அழாதமா,அழாதமா என்று அவளின் ரெண்டு பெண் குழந்தைகளின் ஆறுதலையும் பொருட்படுத்தாது நம்ம அண்ணன் "கிராம தலைவர்" பதவிக்கு நின்னார்.



வழக்கம் போல,இவரும் யாரையும் வோட்டு போட கேட்க வில்லை .முதல் முறை வார்டு மெம்பராய்  நின்ன போது கேட்டது.அப்புறம்,வோட்டு எண்ணுனதும் ஊரே சிரிச்சுது.
அடுத்த முறை நின்னதும்,தொடந்து நின்னதும், யாரும் இப்ப எல்லாம் நம்ம அண்ணனை ஒரு பொருட்டாய் என்றதே இல்ல.

"என்ன புள்ள நம்ம சின்னம் என்னனு தெரியும் இல்ல,"வாளி",கடைசி சின்னம் ,கரெக்டா போட்டுரு என்ன?" என்று சின்னபிள்ளையிடம் சொன்னான் பாண்டியன் 
"போடுறேன்,போடுறேன்,ஆமா அப்புறம்  நீயும் அந்த மூணு வோட்டை மறந்துறாத.அதுக்கு அப்புறம் இருக்குது உனக்கு, வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏறுன கதை "

என்ன தான் சண்டை போட்டாலும்,கட்டுன புருசனுக்கே வோட்டு போட்டாள் சின்னபிள்ளை.

வோட்டு எண்ணும் நாளும் வந்தது.
வழக்கமாய் நம்ம அண்ணன் வோட்டு எண்ணும் பக்கமே தலை வச்சு படுக்க மாட்டார்.ஆனா இந்த முறை தன்னோட பொண்டாட்டிகிட்ட போட்ட சண்டைக்காக வோட்டு எண்ணும் சாவடிக்கு போனார்.பின்ன?,இது அண்ணனின் 25 வருட அரசியல் வாழ்விற்கு விடப்பட்ட சவால்.

"யாருங்க நீங்க?,5000  வோட்டு 50,000  வோட்டு என்ற கட்சி ஏஜன்டே வல்ல,அதுக்குள்ள 7 மணிக்கே வந்துடிங்க?" என்றார் வாட்ச்மன்.
"நான்,கோலாரம் பஞ்சாயத்து எலெக்ஷன்ல நின்ருக்கேன். அதான் " என்றார் அண்ணன்.
"உங்க ஊருல,ரெண்டு  பொம்பளைங்க இடையே தான போட்டின்னு பேசிகிட்டாங்க" என்றார் வாட்ச்மன்.
"ஆமாமா ,இதுவும் ஒரு பொம்பளைக்கும் எனக்கும் இருக்குற போட்டி தான் " என்றார் அண்ணன்.

வழக்கமாய் இதை எதுவும்,கண்டுக்காத சின்னபிள்ளை,இந்த முறை வோட்டு எண்ணிக்கையை எதிர் பார்த்தாள்.இப்பவும்,இந்த ஆளு ரெண்டு வோட்டு தான் வாங்கும்,இனி எலெக்ஷன்ல நிக்காது என்று திடமாய் நம்பினாள்..அண்ணனே வந்து வோட்டு எண்ணிக்கையை சொன்னால் தான் உண்டு..

என்ன ஆச்சு அண்ணனின் அரசியல் வாழ்வு? 

ஒரு அரசியல்வாதி உருவான கதை - 2.

பெரியோர்களே,தாய்மார்களே பிடிச்சு இருந்தா எனக்காவது "இன்ட்லி" வோட்டு போடுங்க.

 

Wednesday, February 23, 2011

கிராம நிர்வாக அதிகாரி தேர்வும்,9 லட்சத்து 59 ஆயிரம் பேர் பற்றிய மனவருத்தமும்

கிராம நிர்வாக அதிகாரி தேர்வும்,மனவருத்தமும்.

தமிழக அரசின் வருவாய் துறையில் கிராம நிர்வாக அதிகாரி (விஏஓ) பதவியில் 3,484 காலி இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வு நடத்தப்படுகிறது. 10-ம் வகுப்பை அடிப்படை கல்வித்தகுதியாக கொண்டு நடைபெறும் இந்த தேர்வு எழுத கடும் போட்டி நிலவியது.  10 லட்சத்து 43 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் தகுதியில்லாத 85 ஆயிரம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.தமிழ்நாடு முழுவதும் 104 நகரங்களில் 3,465 மையங்களில் தேர்வு நடந்தது. 9 லட்சத்து 59 ஆயிரம் பேர் பிப்ரவரி -21 அன்று தேர்வு எழுதினார்கள். (நன்றி : மக்கள் முரசு ).

கிராம நிர்வாக அதிகாரிக்கான தகுதி ,வெறும் பத்தாம் வகுப்பு.ஆனால் இந்த தேர்வு எழுதியவர்களில் பெரும்பாலானோர் இளநிலை,முதுநிலை பட்டதாரிகள். எனக்கு தெரிந்த சில பொறியாளர்களும் இந்த தேர்வினை எழுதி உள்ளனர்.
ஏன் ?
1.வேலை இல்லாமை.
2.இருக்கும் வேலையில் நாட்டம்(விருப்பம்) இல்லாமை.
3.அரசு வேலை வேண்டும் - குறைவாய் வேலை செய்ய.
4.அரசு வேலை வேண்டும் - லஞ்சம் வாங்க.
5.மற்றவை.


இதில் எந்த தகுதியில் வந்தாலும்,இளைய தலைமுறையில் 9 லட்சம் பேர் வேலையில்லாதவர்கள் (அ) வேலையில் நிறைவு கொள்ளாதவர்கள் என்பது வருத்தப்பட வேண்டிய ஒரு விசயம்.இதை ஏன் யாரும் கவனிக்கவில்லை.?
அப்படியானால்,கிராம நிர்வாக அதிகாரி தேர்வு எழுதி வேலை கிடைக்காத 9 லட்சத்து 55 ஆயிரம் பேரின் நிலைமை.? இதற்கு அரசின் பதில் என்ன ..?



எதையும் அரசியலாக்கும்,வியாபாரமாக்கும் ஆட்கள் இந்த கிராம நிர்வாக அதிகாரி தேர்வினை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டனர்.
காலி பணியிடங்கள்(இட,இன ஒதுக்கிடுகள் ) ,தகுதி,எதிர்கால முன்னேற்றம் இதை பற்றி எல்லாம் விளக்கி சொல்லாமல்,அனைவரையும் இந்த தேர்வு எழுத சொல்லி வீணாக்கியவர்கள்.
சில நாளிதழ்கள் இதற்கு என்று தனி பக்கம் ஒதுக்கி விளம்பரம் தேடி கொண்டன. பெரும்பாலான டுடோரியல் சென்டர்கள் VAO பயிற்சி முகாம் என்று மாணவர்க்கு 10 ,000 பணத்தை கரந்தன. இதற்கு  என்று சிறப்பு புத்தகங்கள் வெளியிட்டு காசு பார்த்தன.

தேர்வு எழுதும் முன், இதை எல்லாம் கவனித்தார்களா.?

அரசாங்க தேர்வு என்பது, சதி ,மத இட ஒதுக்கிடுகளை கொண்டது. பெரும்பான்மை சமூகமான BC (பொது) பிரிவுக்கான வெற்று இடம் - 254 மட்டுமே.மற்றவை கீழே.
இது தெரிந்து தான் 6 மாதம் இதற்காக ஒதுக்கி படித்து இருந்தார்களா?



http://www.tnpsc.gov.in/Notifications/dist_of_vacancies_vao2k10.pdf

நண்பர் கணேஷ் , பிரதமர்க்கு பாஸ்போர்ட் வழங்குவதை தீர்மானிக்கும் தகுதி உடைய பதவி, கிராம நிர்வாக அதிகாரி.மேலும் ,அனைத்தும் இளைஞர் கையில் .நல்லது செய்வார்கள் என்று நம்புவோம் என்றார்.

எனது வருத்தம் எல்லாம் பதவி பெற போகும் 3,484 பேர் பற்றியது அல்ல.மீதம் இருக்கும் 9 லட்சத்து 55 ஆயிரம் பேர் பற்றியது .
மேலும் இந்த அரசு தேர்வு ,நேர்மையாக நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.


காலம் பதில் சொல்லும்.

Friday, February 18, 2011

வருத்தபடா வாலிபர் சங்க முன்னாள் தலைவர் - அண்ணன் அசோக்குமார்


சிலருக்கு அழகு உண்டு ஆனால் அறிவு இல்லை ,
பலருக்கு அறிவு உண்டு  ஆனால் அழகு  இல்லை,
ஆனால் தலைவா,உனக்கு மட்டும் தானே,
இரண்டும் இல்லை.

எவர் எம்மை விட்டு சென்றாலும்,
எதற்கும் அஞ்சா சிங்கமாய்,
அவமானம் எல்லாம் சங்கத்தின் அடிமானம் என்று,
சங்கத்தை  காத்த எங்கள் தலைவனே.

நீ தான் சங்கத்தின் நிரந்தர தலைவன் என்று
நினைத்து இருந்த பொழுதில்,
நிர்மூலமாய் தவிக்க விட்டு
சங்கம் வேண்டாம் என்றும்
சம்சாரம் வேண்டும் என்று சென்ற எங்கள் சிங்கமே !!!.

நீ சங்கத்தை விட்டு சென்றாலும்,
நீ சேர்த்து வைத்த பெருமையையும்,கடனையும் 
இனி எக்காலமும் சங்கத்தால் அடைய முடியாது.

தலைவா,தன்னிகரற்ற எங்கள் தானை தலைவா,
தலைவியுடன் நீ பல்லாண்டு காலம் வாழ்க வாழ்த்துகிறோம்.

-வருத்தபடா வாலிபர் சங்கம் - பதிவு எண் - 29844111 / 1995

வருத்தபடா வாலிபர் சங்க  முன்னாள் தலைவர் - 
"ஆட்டையாம்பட்டியின் அரிஸ்டாட்டில்" அண்ணன் அசோக்குமார் - திருமண நாள் - 21st Feb 2011

சோலையப்ப கவுண்டர் திருமண மண்டபம்,ஆட்டையாம்பட்டி

அண்ணனின் திருமண விழாவிற்கு அனைவரும் வருக,நல்லாதரவு தருக.

சங்கத்தின் புது தலைவருக்கான தேர்தல் ஆலோசனை 22 மாலை 7 : 30   மணியளவில் தொடங்கும்.

தகுதிகள்:


1 .வயது 30 க்கும் மேல்.
(58 கும் கீழ்)
2 .அறிவும்,அழகும் இல்லாதிருப்பது.
3 .அடிவாங்க உடம்பில் தெம்பு.
4 .நெருக்கடி நேரங்களில்
உடனடியாய் சங்கத்தை கலைக்கும் திறன் 
5.தலை மறைவாக இருக்க வேண்டிய அளவிற்கு ஒரு வீடு.
(வீடு கட்டி அடிவாங்க) 

Monday, February 14, 2011

நானும் காதலும் - காதலை பற்றி ஒரு காதலிக்காதவனின் கருத்து

நானும் காதலும் - காதலை பற்றி ஒரு காதலிக்காதவனின் கருத்து 


காதல்,ஒரு அழகான சொல். காதல் செய்ய பணமோ,அழகோ,அறிவோ தேவை இல்லை.உண்மையை சொல்ல போனால், அறிவு சற்று கம்மியாக இருப்பது அதிக பலனை தரும்.காதலை நான் அனுபவித்தது இல்லை.அனுமானித்தது உண்டு.

எனக்கும் சில சமயங்களில் காதல் வரும்,உற்று நோக்கினால்(நோக்கினாள் அல்ல) அவை எல்லாம் உண்மையான காதல் அல்ல ,ஒரு affection (இனக்கவர்ச்சி) அவ்வளவு தான்.
ஏன்? காரணங்கள் எளிது,ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை பிடிக்கும் (அல்லது ) ஒரு மாதத்திற்கு ஒரு பெண்ணை பிடிக்கும்.பெண் தோழிகள் என்று எடுத்து கொண்டால்,ஒரு நான்கு வரலாம்.அதுவும்,மாதத்திற்கு ஒரு முறை பேசுவேன் அல்லது அதுவும் பேச மாட்டேன். இவர்கள் அனைவரும்,என்னை மிக நீண்ட நாட்களாய் தெரிந்து(வருட கணக்கில்) ,பின் தோழி ஆனவர்கள்.

நான் ஏன் இப்படி ஆனேன்? நான் ஆணாதிக்க வெறி பிடித்தவனா?. ஆம் - இல்லை

உயர்நிலை  நாட்கள் - சிறு வயதில்,பள்ளி பருவத்தில் ஒரு பெண் மீது ஈர்ப்பு இருந்தது(வழக்கமான கதை தான் ). கதாநாயகன் வந்தான்,கதாநாயகியை கவர்ந்தான்,நான் வில்லன் ஆனேன்.அது தோற்று போனதில் காதலின் எதிரி ஆனேன்.படிப்பில் முதல் இடம் (அல்லது முதல் மூன்று இடங்களுக்குள்) மற்றும் துணைக்கு என் அப்பா நான் படித்த பள்ளியின் ஆசிரியர்.இது போதாதா காதலின் எதிரியாக???

மேல் நிலை நாட்கள் - மேல் நிலை படிப்பிற்காக விடுதிக்கு போனேன்.அது ஒரு புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பள்ளி.பொண்ணுங்க,பசங்க பாக்க கூடாது,பேசக்கூடாது னு சொன்னங்க.அவங்க சொன்னதில்,நான் பின்பற்றிய ஒரே கருத்து இது தான். பேச்சு போட்டியில்  (http://enathupayanangal.blogspot.com/2009/10/blog-post.html ),பள்ளி எங்கும் என் புகழ் பரவி,மேலும் சில பல சித்து வேலைகள் செய்து,கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக, படிப்பை மறந்து திரிந்த காலம்.இந்த காலங்களில் நான் இரண்டு பெண்களிடம் பேசி இருக்கிறேன். பேசியது இது தான்.உங்க ரெகார்ட் நோட் குடுங்க,மிஸ் மார்க்கை கூட்டி சரி பார்க்க சொன்னாங்க..அதற்கு மேல்,எதுவும் நியாபகம் இல்லை.

நான் பெரும்பாலும்,என் நெருங்கிய நண்பர்கள் உட்பட,வாங்க-போங்க என்று  தான் கூப்பிடுவேன்.இதை பலரும் விரும்புவது கிடையாது.

கல்லூரி நாட்கள் - பெண்களிடம் பேசியது குறைவு என்பதால்,ஒரு தயக்கம் இருந்தது.இதற்குள் எனது நண்பர்கள்,அனைத்து வாய்ப்பையும் அணைத்து விட்டார்கள். மேலும்,திருமலை என்ற பெயரால் ரோல் நம்பர் - 52 ,எந்த பெண்ணும் t ,u,v,w ,x ,y ,z  என்ற பெயரில் வராததால் 50 - 60  அனைவரும் மாணவர்கள்.
வழக்கம் போல,internal டெஸ்டில் 50 - 60 ரோல் நம்பர் ஆன  நாங்கள் எல்லாம் பெயில் ஆக,வந்தது வினை.நிறைய பேர் பெயில் ஆகி இருந்தாலும்,நாங்கள் மட்டும் ரவுடி கும்பல் எனப்படும் "v" குரூப் ஆனோம்.(50 - 60   ரோல் நம்பர் ல் , 7 மாணவர்கள் "v" யை ஆரம்பமாக கொண்டவர்கள்).எங்களை கண்டால் எல்லாரும் கதறுவார்கள்.நான் இந்த சங்கத்துக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்தேன்.இந்த சங்கம்,பகலில் சிங்கமாகவும்,இரவில் பெண்களின் செல் சங்கமம் ஆகவும்  இருந்தது,பின்னாளில் தான் தெரிய வந்தது.
இதனால் கல்லூரியில் என் காதல் "லேது,நகி ,இல்லை,மபி".

வேலை நாட்கள் -
ஒரு பெண் அதியசம் ஆக chat ல் வந்தது ,ஸ்கூல் பிரண்ட் என்றது.
அடுத்த நாள் காலை,"hi da " என்றது,நான் உடனே,"hi di " என்றேன்.அவ்வளவு தான் ,என்னை பிளாக் பண்ணிவிட்டது(block தான் ,blog அல்ல) .
நண்பனிடம்,கேட்டால்,ஐயோ,இதெல்லாம் பன்னப்பிடாது என்றான்.

இதை எல்லாம் படித்து விட்டு,ஒரு பேக்கு,சோடாபுட்டி கண்ணாடி,படிந்த எண்ணெய் போட்டு வாரிய தலை,தொள தொள சட்டை,பேண்ட்  என்று உருவம் செய்தால் ,அது தான் நான் - க. திருமலை. பாஸ்போர்ட்,விசா ,கிரெடிட் கார்டு,பான் கார்டு,லைசென்ஸ் என்று எல்லாவற்றிலும் தன் தமிழ் பெயரை முழுதாய் எழுதி, கையெழுத்து என்று சொல்லி,பலரை அலற (அழ) வைத்தவன்.

நான் காதல் வயப்படா காரணம்,


1 . பெண்களை மதிக்காமல் ,அதிகமாய் நக்கல் செய்வது.அதிகமான பேச்சு.
2 . பெண்களிடம் ம்,ம் என்று அரை மணி நேரம் சொல்ல ,பொறுமை இல்லாமை. சாப்டியா?,தூங்கினியா? என்றெல்லாம் சொல்லாதது.
3 . வாங்க,போங்க என்று நான் சொல்லுவதால்,நான் சின்னப்பையனாக ஆகி ,அவர்கள் அக்கா ஆவதாக எண்ணி அரண்டு போய் ஓடிப்போனது.
4 . ஜாதி பிரச்சனை - நான் பாட்டுக்கு,கல்யாணம் பண்ணி கொண்டு போனால் ,கிராமத்தில் இருக்கும் என் பெற்றோரை நேரடியாய் பாதிக்கும் என்று எண்ணியது.முக்கியமாய் ரெண்டு பக்கமும் அடி பின்னிடுவாங்க என்ற பயம்.
5 . ஹீரோ என்று எண்ணி பல செயல்கள் செய்து காமெடியன் ஆனது.
6 . சம வயது பெண்களிடம் பழக  அதிக வாய்ப்பு இல்லாமை.அக்கா,தங்கை இல்லாமை.வீட்டில் ஒரே பையன்-தனிக்காட்டு ராஜா எல்லாம் கிடையாது.
எங்கம்மாவிடம் - தினமும் அடி வாங்குவேன் சிறுசாய்,
அப்பாவிடம் - எப்பவாவது வாங்குவேன் பெருசாய் .


இப்படி எல்லாம் நான் காரணங்கள் சொன்னாலும்,உண்மை இது தான்.
எனக்கு காதலிக்க வாய்ப்பு வரவில்லை.வாய்ப்புகளை உருவாக்க தெரியவில்லை.

காதலிப்பவர்கள் காதலில் வெற்றி அடைய என் வாழ்த்துக்கள்.

 நன்றி (love image )-  http://www.nkdreams.com/poems/?p=21

Sunday, January 23, 2011

ஹிந்தி - அறிந்தும் அறியாமலும்.


வெளிநாட்டிலும் சரி, உள்நாட்டிலும் சரி(தமிழகம் தவிர),நாம் சந்திக்கும் ஒரு சங்கடம் - ஹிந்தி.
ஹிந்தி தெரியாமல் பல இடங்களில் சந்தி சிரித்து,ஹிந்தி படித்து கொண்டிருக்கிறேன்.



இந்தியாவில் இருந்து கொண்டு ஹிந்தி தெரியாதா.? என்ற கேள்விக்கு விடை சொல்ல முடியாமல் தவிக்கும் ஒரு தமிழன்.முன்பெல்லாம் சில விளக்கங்கள் சொல்வேன்,இப்போதெல்லாம் விளக்கமே கிடையாது.சிரித்து கொண்டே சென்று விடுவேன்.
இந்த விளக்கங்களை கேட்ட பிறகு,அவர்கள் கொடுக்கும் ஆலோசனைகள்,கேட்கும் கேள்விகள் மகா எரிச்சல்.

1 . ஹிந்தி நம் தேசிய மொழி.அது தெரியாதுன்னு நீங்க சொல்றது ஆச்சிர்யமா இருக்கு.
2 . ஹிந்தி தெரியாமல் நீங்க இங்க வாழ முடியாது (அ) வாழ்றது கஷ்டம்.
3 . அப்போ உங்களுக்கு தமிழ் மட்டுமே  போதுமா?
4 . ஹிந்தி கற்று கொள்வது ஒரு இந்தியனின் கடமை.


நிகழ்வு - 1.(சவுதி அரேபியா)

நான் - ஐ வான்ட் டு கோ டு exit-6 ,
பாகிஸ்தானி - கியா? ஹிந்தி மாலும்?
நான் - ஹிந்தி மபி மாலும்.
பாகிஸ்தானி - அரபி.
நான் - மபி.
பாகிஸ்தானி - உருது.
நான் - மபி.
பாகிஸ்தானி - கியா..? !@$@##&* @### !@#$$$ !@##

அவர் கண்டிப்பாக என்னை திட்டி விட்டு சென்றிருக்க வேண்டும்.ஆனால் ஒரு சந்தோசம்.அவர் சொன்னது என்ன மொழி என்றே எனக்கு தெரியாது.
பிறகு தான் தெரிந்தது உருதும்,ஹிந்தியும் கொஞ்சம் சொந்தமாம்..ஹிந்தி தெரிந்தால் உருதுவை சமாளிக்கலாம் என்று ..

நிகழ்வு - 2.(துபாய்)

வழிப்போக்கன்1 - ஹாய்,ஆர் யு கமிங் ப்ரம் இந்தியா?
நான் - எஸ்,
வழிப்போக்கன்1 - அச்சா,மே !@#$%  !@#$$ ^*())@!!
நான் - மே ஹிந்தி  நஹி மாலும்.
வழிப்போக்கன்1 - மதராசி ? !@#$%  !@#$$ ^*())@!!

நிகழ்வு - 3.(துபாய்)( ஒரு மணி நேரத்திற்கு பிறகு )

வழிப்போக்கன்2 - ஹாய்,ஆர் யு கமிங் ப்ரம் இந்தியா?
நான் - நோ, ஸ்ரீலங்கா - தமிழ் .
வழிப்போக்கன்2  -- ஒஹ் ,,,ஒகே..bye .

வெளி மாநிலங்களில்/நாடுகளில்  நம் ஆட்களின் புலம்பல் இது தான்.
ஹிந்தி தெரியாம நாம் கஷ்ட படுறோம் .தமிழ் நாட்டில் ஹிந்தி வேண்டும் .ஹிந்தி வேண்டும்.ஹிந்தி வேண்டும்

சரி,அப்படினா இதுக்கு ஒரே தீர்வு,,பள்ளி பாடத்தில் ஹிந்தி சேர்க்கப்பட வேண்டும் என்று நான் சொல்வேன் என்று நீங்கள் நினைத்தால், அது தவறு.






தமிழ்நாடு எங்கள் நாடு,எனக்கு வேண்டாம் ஹிந்தி.

ஏன்?

1 .குஜராத்தில்  மூன்று மாதமாய் இருக்கிறேன்,ஹிந்தி ஆதிக்கம் மிக மிக அதிகம்.சொந்த மொழியான குஜராத்தி வழக்கில் ரொம்ப குறைவு.
இதே நிலை தான் நம் தமிழுக்கும் ஏற்படும்.இந்த ஹிந்தி ஆட்கள்,ஆங்கிலம் தெரிந்தால் கூட,ஹிந்தி மட்டுமே பேசும் ஹிந்தி வெறி புடித்த ஆட்கள்.

2 . வேற்று மாநில மக்கள் எளிதாய் நம் மாநிலம் வந்து குடியேற ஒரு தடைக்கல்,நம்ம தமிழ்.தமிழுக்கு பயந்து இங்கு வராத ஆட்கள் மூலம் நமக்கு வேலை வாய்ப்பு அதிகமாகிறது.
மேலும், வரும் வெளி ஆட்களும் தமிழ் கற்று கொள்வதால் தமிழ் வளர்கிறது.

3 . அப்படியானால் வெளி மாநிலம் செல்லும் நம் ஆட்களின் நிலைமை?,உங்கள் சொந்த விசயமாய் நீங்கள் வெளி செல்வதால்,ஹிந்தி அறிந்து கொள்வது உங்கள் விருப்பம்/கடமை.
நீங்கள்/நான் வெளி மாநிலம் சென்று பிழைக்க ஒட்டு மொத்த தமிழ் நாட்டையும் ஹிந்தி கற்று கொள்ள சொல்ல வேண்டாமே.
உதாரணம் - என் நாமக்கல் மாவட்டம்,இங்கு முக்கியமான தொழில்,போர்வெல்(ஆழ்துளை கிணறு).இவர்களின் தொழில் இடமே வட மாநிலங்கள் தான்.
இவர்கள் அனைவரும் ஹிந்தி கற்று கொண்டு தான் சிறப்பாக  தொழில் செய்கின்றனர்.

4 . ஹிந்தி வழக்கில் வந்தால் தமிழ் புத்தகங்கள்,தமிழ் படங்கள் அனைத்தும் பாதிக்கப்படும்.


5. இரு மொழி கொள்கை(தமிழ்,ஆங்கிலம்),நமக்கு ஆங்கில புலமை வளர உதவுகிறது.
ஹிந்தி வந்தால்,அதன் தாக்கம் அதிகமாக அதிகமாக அது ஆங்கிலத்தை பாதிக்கும்(குறிப்பாக கிராமப்புறங்களில்).



எனவே தோரயமாக, ஒரு 7 லட்சம் தமிழ்நாட்டு மக்களின் தேவைக்கு ,ஏழு கோடி தமிழ் மக்களும் ஹிந்தி படிக்க தேவை இல்லை என்பது என் கருத்து.

இவை அனைத்தும் ,எனது பார்வையில் ஹிந்தி மொழி .உங்கள் கருத்துகளையும் பகிரலாம்.

--> ஒரு உதவி. 

கீழ இருக்கிற இன்ட்லி like பட்டனை அழுத்தி vote போடுங்க சாமி.
10  vote வந்த தான் இன்ட்லி சைட்ல போடுவாங்க. 

Thursday, January 13, 2011

பரோடாவில் ஒரு பட்டிகாட்டான் - 1

பரோடாவில் ஒரு பட்டிகாட்டான்.

சென்னையில் ஒரு வெண்ணை பதிவிற்கு நீங்கள் கொடுத்த பேராதரவிற்கு நன்றி.
என் வேண்டுகோளை ஏற்று,படித்துவிட்டு இனி எழுதவே வேண்டாம் என்று சொன்ன அந்த நான்கு நண்பர்களுக்கும் நன்றி,நன்றி, நன்றி.
கொஞ்சம் மனதை திடப்படுத்தி கொள்ளவும்(கொல்லவும் அல்ல) .
இதோ வந்து விட்டது,மற்றுமொரு தொடர் பதிவு. பரோடாவில் ஒரு பட்டிகாட்டான். மேலும் ஒரு துயர செய்தி.சென்னை வந்தவுடன் "சென்னையில் ஒரு வெண்ணை" தொடரும்.
ஒரு ஆறுதல் செய்தி.வேலை முடிந்தால் தான் சென்னை.ஆனால் வேலை முடிய(?,! $) இன்னும் இரண்டு மாதங்கள் அல்லது அதற்கு மேல் ஆகலாம்.



பரோடா என்பது குஜராத்தில் ஒரு ஊர்.பரோட்டா என்று படித்தவர்கள் அனைவரும் இதை கண்டிப்பாக படிக்க வேண்டியவர்கள்.
அதை இப்போது வடோதரா என்று மாற்றி விட்டார்கள்.எதுக்கு தான் ஊர் பேரை மாத்துராங்கனே தெரியல.
இங்க எனக்கு என்ன வேலை?,,வழக்கம் போல போட்டி போடற வேலை தான்.




பரோடா,உங்களுக்கு நினைவில் கொண்டு வர உதவுவது "Bank of Baroda", அதை ஏன் இன்னும் "Bank of Vadodara" என்று மாத்தல?,அதை மோடி கிட்ட தான் கேக்கணும்.அது யாரு மோடி?,
குஜராத் முதல்வர்,மீடியா மன்னர்,நரேந்திர மோடி.




பரோடாவில் பிடித்தது,
1. அழகா,அம்சமா செக்க செவேல்னு சேட்டு பொண்ணுங்களோட குழந்தைங்க.
2. மீட்டர் போட்டு ஓட்டும் ஆட்டோக்கள்.அதுவும் டீஸல் இல்லாமல் CNG யில்.
3.மதுவிலக்கு மாநிலம்,, நோ டாஸ்மாக்,,நம்ப தமிழ்நாடு " மது-விளக்கு" மாநிலம்.உண்மையை சொல்லணும்னா சரக்கு கிடைக்கும்,ஆனா ரேட் ஜாஸ்தி.நல்ல விஷயம்.
4.புறா,ரோடு முழுக்க புறா,ஊர் முழுக்க புறா. புறா பிடிக்க இந்த ஊர்ல தடையாம்.அப்புறம்,80 % மக்கள் சைவம்.
5.24 மணி நேரம் மின்சாரம்.நோ பவர் கட்.

பிடிக்காதது,
1 .பேசுறது ஹிந்தியா இல்ல குஜராத்தியா? கொஞ்சம் சொல்லிட்டு பேசுங்க.
2.பாக்கு போடும் ஆட்கள்.

சில விளக்கங்கள்.
1.எல்லாரும் சொல்லற மாதிரி ,குஜராத் முன்னேறுதா?,
ஆமாம்,உண்மை தான்.இப்ப கூட vibrant குஜராத் னு ஒரு திட்டம்.$370 பில்லியன் முதலீடு.
http://www.vibrantgujarat.com/

2.அப்போ, ஏழைகளே இல்லையா?காரணம்.
இல்ல இருக்காங்க,ரோட்டு ஓரத்தில்,பிச்சைக்காரங்க - எல்லாரும்.
காரணம்,தெரிஞ்சா சொல்வேன்.

3 .ரோடு வசதி எப்படி?
சூப்பர்,எல்லாம் பெரிய பெரிய ரோடு .எல்லா சிக்னலும் - ரவுண்டானா.

எனக்கு தெரிஞ்ச ஹிந்தி வார்த்தை, "துமாரா நாம் கியா ஹேய்?",,இந்த பிட்டை,இங்க கொளுத்தி விட்டேன்.
ஆனா எனக்கே அது ரிவிட் அடிச்சிருச்சு.
"துமாரா நாம் கியா ஹேய்" னு கேட்பது மரியாதை குறைவாம்."உன் பேர் என்ன?" மாதிரியாம்.
"ஆப்கோ நாம் கியா ஹேய்"னு தான் சொல்லனுமாம்."உங்க பேர் என்ன?"

அட பாவிங்களா, ஐஞ்சாவது வரைக்கும் நான் ஹிந்தில கத்துக்கிட்ட ஒரே வாக்கியம் இது தான்.அதையும் தப்பாய் சொல்லி குடுத்த அந்த வாத்தியார் ,நல்லா இருக்கட்டும்,அவுங்க பையன் வளமாய் வாழட்டும்.
ஏன்னா? , எங்க அப்பா government school வாத்தியார்,ஹி ,ஹி,ஹி .

நாளை இங்க உத்தரயன் பண்டிகை .அதை கொண்டாட நாளை அஹ்மதாபாத் போறேன்.
வருவேன்,தொடர்வேன்..அங்க குண்டு வெடிக்காமல் இருந்தால்.

வளரும் எழுத்தாளானுக்கு  ஒரு உதவி. 

கீழ இருக்கிற இன்ட்லி like பட்டனை அழுத்தி vote போடுங்க சாமி.
10  vote வந்த தான் இன்ட்லி சைட்ல போடுவாங்க.